Wednesday 23 December 2015

இன்று விவசாயிகள் தினம்

இன்று விவசாயிகள் தினம் 




                                     நாடு முழுவதும் இன்று விவசாயிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. விவசாயிகளின் தலைவரும் முன்னாள் பிரதமருமான சவுதாரி சரண் சிங் பிறந்த நாளை முன்னிட்டு நாடுமுழுவதும் விவசாயிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.மேலும் இந்த நாளை உத்திர பிரதேச அரசு அரசு விழாவாகவும் விடுமுறை நாளாகவும் அறிவித்துள்ளது

                                     நம் நாட்டின் முதுகெலும்பை போற்றுவோம் வாருங்கள் நண்பர்களே,உலக அளவில் உணவுத் தட்டுபாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில் எதிர்காலம் விவசாயிகள் கையில் என்பதை வலியுறுத்தியும், உணவு பாதுகாப்பையும் வலியுறுத்தியும் டிசம்பர் 23ம் தேதி விவசாயிகள் தினமாக (Kisan Day - Farmers Day,  December 23 ) கொண்டாப்படுகிறது. 
                                     இந்தியாவின் மறைந்த பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் 1979 முதல் 1980 வரை பிரதமர் பதவி வகித்தார். இந்தியாவில் 70 சதவிகித மக்கள் விவசாயம் சார்ந்து வாழ்கிறார்கள்.
இன்று விவசாயி என்றால் பிழைக்க தெரியாதவன் என்பதாக இளைஞர்கள் மத்தியில் எண்ணமிருக்கிறது.
                                     ஒரு காலத்தில் உலகத்துக்கே உணவளித்த நம் தேசம் இன்றைக்கு பருப்புக்கும் அரிசிக்கும் அந்நிய தேசங்களை நம்பி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. நீர் நிலைகளை நில ஆக்கிரமிப்புகள் சாப்பிட்டு விட்டன. நதிகள், தொழிற்சாலை கழிவுகளை சுமக்கும் சாக்கடைகளாக மாறி இருக்கின்றன. ஆறுகள்,
அரசு ஆதரவுடன் மணற்கொள்ளை நடக்கும் இடமாக இருக்கிறது.
                                     உணவுப் பொருட்களின் விலை உச்சத்துக்கு உயர்ந்தும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை.விவசாயிகளுக்கு அவர்களின் நிலம்தான் தாய். அதில் விளையும் பயிர்கள்தான் அவனின் குழந்தைகள் என்றால் மிகையாகாது. நிலம் மற்றும் பயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் மனதளவில் பொருளாதார ரீதியில் தாங்கிக் கொள்ள முடிதாததாக இருக்கிறது.
                                     இந்திய விவசாயிகளின் வாழ்க்கைத் தரம், கல்வித் தரம் உயர்த்தப்பட்டால் அவன் முன்னை விட அதிகமாக துடிப்பாக விவசாயம் செய்து நம்மை எல்லாம் காப்பாற்ற முடியும். தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 130 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு இருக்கிறது. இதில், 51 லட்சம் ஹெக்டேரில் விவசாயம் செய்யப்படுகிறது. தமிழக மக்களில் சுமார் 55 சதவிகிதம் பேர் (3 கோடி பேருக்கு மேல்) விவசாயம் மற்றும் அது தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
                                     பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி தொடங்கி, அறு வடை வரை அனைத்தையும் கடன் வாங்கித்தான் செய்துவருகிறார்கள். கடன் கிடைக்காத நிலையில் வீட்டிலுள்ள பொருட்கள், மனைவி, மகள்களின் நகைகளை விற்று அல்லது அடமானம் வைத்துதான் விவசாயம் செய்து வருகிறார்கள்.
                                     இப்படி கஷ்டப்பட்டு விவசாயம் பார்த்தாலும் மழை, புயல், பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் அவன் வருமான ஆதாரம் மண்ணோடு மண்ணாகி விடுகிறது.
இப்படிப்பட்ட நேரத்தில் கை கொடுக்க தேசிய வேளாண் பயிர் காப்பீடு திட்டம் இருக்கிறது. இந்த இன்ஷூரன்ஸ் திட்டம் பற்றி பெரும்பாலான விவசாயிகளுக்கு தெரியாத நிலை இருக்கிறது. இந்த இன்ஷூரன்ஸுக்கான பிரீமியத்தை விவசாயிகள் 100 சதவிகிதம் கட்ட வேண்டியதில்லை. விவசாயிகள் 50%, தமிழக அரசு 45%, மத்திய அரசு 5% கட்டுகிறது. மேலும், தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டால் அவற்றுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் கோயம்புத்தூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், ஈரோடு, தேனி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
                                     இது போன்ற வசதிகள் இருப்பதை விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்வது நம் அனைவருக்கும் முக்கிய கடமையாக இருக்கிறது. விவசாயிகளை ‘தேசத்தின் முதுகெலும்பு’ என்றார் மகாத்மா காந்திஜி. இன்றைய தேதியில் விவசாயிகள் தினத்தில் மட்டும்தான் அந்த முழுகெலும்பை தேசம் திரும்பி பார்க்கிறது.


நன்றி : - முக நூல் அன்பர்கள் 

No comments:

Post a Comment